|
எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே நெருக்கமான உறவு உண்டு. ஜெயமோகன் எழுதிய “இன்றைய காந்தி” என்ற நூல்தான் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
காந்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்ட ஜெயமோகனின் நூலில் பெரியாரின் வைக்கம் போராட்டத்தையும், அம்பத்கேரையும் கம்யூனிஸ்டுகளையும் சிறுமைப் படுத்தி எழுதியுள்ளார் என்பதே ஜெயமோகனின் மீது உள்ள குற்றச் சாட்டு. மேலும் பெரியார் தலித்துகளுக்காக எதுவும் செய்யவில்லை என்றும், தாழ்த்தப் பட்டவர்களை காங்கிரசிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே பெரியாரின் மேடைப் பேச்சுக்கள் அமைந்திருந்தன என்கிறார் ஜெயமோகன். இது போலவே பெரியாரின் வைக்கம் போராட்டத்துக்கு பெரிய அளவில் வரலாற்று முக்கியத்துவம் இல்லை என்றும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
இது போன்ற சர்ச்கைகள், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களை, ஜெயமோகனின் நூலுக்கு எதிர்வினையாக ஒரு புதிய நூலையே வெளியிட வைத்திருக்கிறது. ஜெயமோகனுக்கு பதில் சொல்லும் விதமாக “இன்றைய காந்தி யார் ?” என்ற புத்தகத்தை மிகுந்த ஆய்வுக்குப் பிறகு எழுதியுள்ளார் க.திருநாவுக்கரசு அவர்கள்.

மார்க்சியமும் கம்யூனிசமும் அனைவருக்குமே பிடிக்கும் என்றாலும், மார்க்சிய சிந்தனைகளுக்கு அடிப்படையாக உள்ள மூலதனத்தை முழுமையாக படித்து புரிந்து கொண்டவர்கள் வெகு குறைவு. தோழர்.தியாகு மற்றும் ஜமதக்கனி தமிழில் மொழி பெயர்த்த மூலதனம் வந்த பிறகும், அதைப் படித்தவர்கள், புரிந்து கொள்ள மிகுந்த சிரமமாக இருக்கிறது என்றே கூறியிருக்கிறார்கள்.
அந்த மூலதனம் நூலின் முதல் அத்தியாயத்தை எடுத்து திறனாய்வு செய்து எளிய முறையில் விளக்க முற்பட்டிருக்கிறார்கள் நூலாசிரியர்கள் க.திருநாவுக்கரசு மற்றும் சோதிப்பிரகாசம் ஆகியோர். கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய வேலைகளை திராவிட இயக்கத்தினர் செய்கிறார்கள் என்பதே ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். அதற்கும் நூலாசிரியர்கள் பதில் சொல்லுகிறார்கள்.
கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் ஒரு கட்சியினரின் உடைமை அல்ல. அதை அனைத்துக் கட்சியினரும் அறிந்து வைத்திருப்பது பாவகரமாக செயலும் அல்ல என்று தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு நூல்களும், வரும் அக்டோபர் 15 அன்று சென்னையில் தேவனேயப்பாவாணர் அரங்கத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப் பட இருக்கிறது.
|