|
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ, அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ என்றார் கவிஞர் கண்ணதாசன். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, தமிழக காவல்துறைக்கு நன்றாகவே பொருந்தும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே காவல்துறை கடிவாளம் இல்லாத குதிரை போல அடங்காமல் ஓடும் என்பது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய மிக மோசமான காவல்துறை வன்முறை அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் தன் கணவர் கண் முன்பாகவே பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான சிதம்பரம் பத்மினி என்பவரின் வழக்கு. அந்தப் பத்மினியின் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப் பட்ட, அப்போது டிஐஜியாக இருந்த லத்திக்கா சரண், விசாரணை நடத்தி விட்டு, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றார்.
அதன் பிறகு இந்த வழக்கில் மெஹபூப் பாட்சா, பார்த்தசாரதி, ஜாபர் சித்திக் மற்றும் கருணாநிதி ஆகிய நான்கு காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப் படுகிறது. இந்தச் சம்பவத்தில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், பத்மினியின் வாக்குமூலத்தை தங்களது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
“ஞாயிற்றுக் கிழமை மதியம் 1 மணிக்கு இரண்டு போலீசர் எனது வீட்டுக்கு ஆட்டோவில் வந்தனர். வந்தவுடன் லத்தியால் எனது பின்புறத்தில் அடித்தனர். நான் வெளியே ஓடினேன். அங்கே ஒரு ஆட்டோவில், சுப்ரமணியன் மற்றும் நந்தகோபால் கை விலங்கோடு இருந்தனர். பின்னர் அந்த ஆட்டோவில் என்னை ஏற்றி அண்ணாமலை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கே நான்கு ஐந்து பேர் சேர்ந்து என்னைத் தாக்கினர். எனது ஜாக்கெட் கிழிக்கப் பட்டது. யார் கிழித்தது என்று தெரியவில்லை. அப்போது இரண்டு பெண் போலீசார் இருந்தனர். இரவு அவர்கள் சென்று விட்டனர். லாக்கப்பில் எனது கணவர் நந்தகோபால், சுப்ரமணி, கொளஞ்சி, மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் இருந்தனர். மாலையில் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு 50 ரூபாய் போட வேண்டும், பார்ட்டி இருக்கிறது என்று பேசினர். அப்போது ஒரு போலீஸ் எதற்கு பார்ட்டி என்று கேட்டதற்கு அவர் காதில் ஏதோ சொன்னார்கள். உடனே அந்த போலீஸ்காரர், “ச்சீ நீங்களெல்லாம் அக்காள் தங்கையோடு பிறக்கவில்லையா” என்று கேட்டு விட்டு வெளியே சென்று விட்டார். திங்கள் அன்று இரவு 8 மணிக்கு எனது கணவர் நந்தகோபாலை லாக்கப்பிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். லாக்கப்பிலிருந்த கொளுஞ்சி என்பவரை அழைத்து என் புடவையை உருவச் சொன்னார்கள். அவர் தயங்கியதும் லத்தியால் அவரை அடித்தனர். உடனே மற்றொரு போலீஸ்காரர் என் புடவையை உருவினார். நான் பாவாடை மற்றும் ஜாக்கெட்டோடு இருந்தேன். மற்றொரு போலீஸ்காரர் வந்து என் பாவாடையையும், ஜாக்கெட்டையும் அவிழ்த்தார். என்னை நிர்வாணமாக்கி காவல் நிலைய வராண்டாவில் ஓடச் சொன்னார்கள். என்னை அடித்ததால் நான் கீழே விழுந்தேன். பிறகு ஒருவர் ஒருவராக வந்து எனக்கு முத்தம் கொடுத்தார்கள். அதில் ஒரு போலீஸ்காரர் உன்னுடைய ……….. பெரிதாக இருக்கிறது. இந்த வலியை உன்னால் தாங்க முடியாது என்று சொல்லிக் கொண்டு அடித்தார். நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். அப்போது யாரோ ஒருவர் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் வந்தார். நான் உடனே புடவையை எடுத்த சுற்றிக் கொண்டேன். அவரிடம் இங்கே பார்த்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி அனுப்பினார்கள்.

மறுநாள் இரண்டு பெண் காவலர்கள் வந்தனர். நான் அவர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இனி யாரும் உன்னை அடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு ஒரு ஆண் காவலர் வந்தார். இரவு 10.30 மணிக்கு என் கணவர் நந்தகோபாலை லாக்கப்பிலிருந்து வெளியே எடுத்து வந்தார்கள். என் கணவரை சுவற்றோரம் நிற்க வைத்து சராமாரியாக அடித்தார்கள். என் கணவர் கையில் விலங்கு போடப் பட்டிருந்தது. நான் போலீஸ்காரர்களிடம் மண்டியிட்டு என்னை விட்டு விடுங்கள் என்று கதறினேன். என் புடவையையும் ஜாக்கெட்டையும் அவிழ்த்த என்னை நிர்வாணமாக்கினர். அதில் ஒரு வயசான போலீஸ்காரர், என் பிறப்புறுப்பில் லத்தியால் குத்தி “பெருசா இருக்கு எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்ப்போம்” என்றார். ஐந்து போலீசார் நன்றாக குடித்திருந்த நிலையில் வந்தனர். என் கணவரை துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்த வண்ணம் இருந்தனர். என் கணவரைப் பார்த்து நீ இன்று இரவு மட்டும் தான் உயிரோடு இருப்பாய் அதனால் பார்த்து என்ஜாய் பண்ணு என்று சொன்னார்கள். அப்போது அங்கே இருந்த சப் இன்ஸ்பெக்டர் நான்தான் முதலில் பண்ணுவேன். இங்கே நான்தான் ஆபீசர் என்றார். சப் இன்ஸ்பெக்டர் நான் முதலில் போகிறேன் என்று சொல்லி விட்டு, ஆணுறை மாட்டிக் கொண்டு என்னை வன்புணர்ச்சி செய்தார். அதன் பிறகு மீதம் உள்ள ஐந்து போலீசாரும் என்னை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கினார்கள். என் கணவர் முன்பாகவே இந்த வன்புணர்ச்சி நடந்தது. அனைவரும் ஆணுறை பயன்படுத்தினார்கள். என் மனைவியை விட்டு விடுங்கள் என்று என் கணவர் கத்தியதை யாரும் சட்டை செய்யவில்லை. என் கணவர் தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கேட்டார். நான் என் உடம்பில் புடவையை சுற்றிக் கொண்டு என் கணவருக்கு தண்ணீர் கொடுக்கச் சென்றேன். அப்போது என்னை தடுத்த போலீசார், என் கணவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றால் ஐந்து பேருக்கும் முத்தம் கொடுக்க வேண்டும் என்றனர். நான் ஐந்து பேருக்கும் முத்தம் கொடுத்து விட்டு தண்ணீர் கொடுக்கச் சென்ற போது தண்ணீரை தட்டி விட்டனர். மீண்டும் என்னை வன்புணர்ச்சிக்கு வலுக்கட்டாயமாக இழுத்த போது நான் அவர்கள் காலில் விழுந்து கதறினேன். பிறகு நான் மயக்கமாகி விழுந்து விட்டேன்.
மறுநாள் என் கணவரை அடித்தே கொன்று விட்டனர் என்பதை தெரிந்து கொண்டேன்” என்று பத்மினி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்ததை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டி, இந்த வாக்குமூலம் பொய் என்பதை நம்புவதற்கான காரணங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் நீதிமன்றத்துக்கு வந்து இது போன்ற பொய்யான வாக்குமூலத்தை கொடுக்க மாட்டார் என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதாவது ஒரு வழக்கில் மரண தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒரு வழக்கு இருக்குமென்றால் அது இந்த வழக்குதான். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் மேல், நந்தகோபாலை கொலை செய்ததற்கான 302 பிரிவு சேர்க்கப் படாமல் போனது துரதிருஷ்டமானது என்று குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தின் டி.கே.பாசு என்ற பிரபல வழக்கின் தீர்ப்பிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.
“ஒரு நாகரீக சமுதாயத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் மரணம் என்பது இருப்பதிலேயே மோசமான குற்றம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் 22 (1)ல் வழங்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். சித்திரவதை, கொடுமை அவமானப்படுத்துதல் போன்ற விஷயங்கள் எந்த இடத்தில் நடந்தாலும் அது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21க்கு எதிரானது. அது காவல்துறையின் புலனாய்வின் போதோ, எந்த நேரத்திலோ இருந்தாலும் சரி. அரசு இயந்திரத்தின் காவலர்கள் சட்டத்தை உடைப்பவர்களான மாறினால் அது சமுதாயத்தில் சட்டத்தின் ஆட்சியை உடைத்து காட்டுமிராண்டித்தனத்துக்கு வழி வகுக்கும். எந்த ஒரு நாகரீக நாடும் இது போன்ற கொடுமைகளை அனுமதிக்க முடியாது. ஒரு மனிதரை காவல்துறையினர் கைது செய்த உடன் அவருக்கு உண்டான உரிமைகளை அவர் இழக்கிறாரா என்ன ? ஒருவர் கைது செய்யப் பட்டவுடன் அவரது அடிப்படை உரிமைகள் பறிபோகிறதா என்ன ? இந்தக் கேள்விகள் மனித உரிமைகளின் முதுகுத்தண்டைத் தொடுபவை. அவரின் உரிமைகள் பறிபோகிறதா என்ற கேள்விக்கு அழுத்தமாக “இல்லை” என்றே சொல்ல வேண்டும் என்று அந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உள்துறைச் செயலாளர்களுக்கும் டிஜிபிக்கும் அனுப்பி டி.கே.பாசு வழக்கில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டது 2011 மார்ச் 29. தற்போது மீண்டும் நான்கு மலைவாழ் பெண்கள் காவல்துறையினரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பிரபா.கல்விமணி இந்தப் பெண்களின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.

பேராசிரியர் பிரபா.கல்விமணியோடு சவுக்குக்கு அறிமுகம் ஏற்பட்டது 2007ம் ஆண்டில். அண்ணா பல்கலைகழகத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இருவரது பிள்ளைகளுக்கும் முறைகேடாக சீட் பெற்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று, அந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என புகார் கொடுக்க முடிவு செய்யப் பட்டது. அப்போது அரசு ஊழியராக இருந்ததால் நேரடியாக புகார் கொடுக்க முடியாது. ராதாகிருஷ்ணனின் நயவஞ்சகத்துக்கும் தந்திரத்துக்கும் மயங்காத, மசியாத ஒரு நபர் யாரென்று விசாரித்தால் அனைவரும் சொன்ன பெயர் கல்விமணி. சரி இவரைச் சந்திக்கலாம் என்று திண்டிவனம் சென்று விபரத்தை கூறினால், அவருக்கு ஏதோ தனிப்பட்ட விரோதத்துக்காக இந்த புகாரை கொடுக்க வைக்கிறோமோ என்ற சந்தேகம்.
இதனால் ஒரு மாதத்துக்கு அலைய வைத்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை திண்டிவனம் சென்று இரவு வரை கல்விமணியோடே இருக்க நேர்ந்தது. இறுதியாக தனிப்பட்ட விரோதம் காரணமாக புகார் கொடுக்க விரும்பவில்லை, ஊழலை வெளிக் கொணர்வதற்காகவே என்பதை புரிந்து கொண்டவர் இறுதியாக 2007 நவம்பர் 3 அன்று அந்தப் புகாரில் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பினார்.
இதுதான் கல்வி மணி. தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் உண்மை இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவர் இந்தப் புகாரை கையில் எடுத்திருக்கிறார் என்றாலே இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் உண்மை இருக்கிறது என்பது புரிந்தது.
இன்று திண்டிவனத்தில் பேராசிரியர் கல்வி.மணியைச் சந்தித்த போது அந்த பழங்குடியினப் பெண்களிடம் 9 மணி நேரம் நடந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்ததாக தெரிவித்தார்.
இதில் பாதிக்கப் பட்ட பெண்ணான லட்சுமி என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்த புகார்.
நாள் 26.11.2011
அனுப்புதல்
லட்சுமி (20) க/பெ காசி
பெருமாள் கோவில் மண்டபப் படி
தி.மண்டபம், திருக்காவிலூர்
பெறுநர்
காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்
ஐயா,
பொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
><><>
வணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.
(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.
(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.
(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.
(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.
(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.
(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள
ஒம்/-லட்சுமி
இந்தப் புகாரை கல்விமணி மாவட்ட எஸ்.பி.என்.பாஸ்கரனிடம் நேரில் கொடுத்துள்ளார். பாஸ்கரன் கல்விமணியை உட்கார வைத்து உங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். மிகச் சிறந்த மனித உரிமைப் போராளி நீங்கள் என்று கல்விமணியை குளிர்வித்திருக்கிறார். இருங்கள் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கேட்டதற்கு, வேண்டியதில்லை அய்யா, நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று மறுத்து விட்டார். பாஸ்கரன் இப்படி கல்விமணிக்கு சோப்பு போட்டது எதற்கு என்பது சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது.
கல்விமணியை சிறிது நேரத்தில் சந்தித்த பாண்டியன் மற்றும் இன்னொரு டிஎஸ்பியும் சேர்ந்து கல்விமணியிடம் பேரம் பேசியிருக்கிறார்கள். பேரம் என்னவென்றால், பாதிக்கப் பட்ட பெண்களின் உறவினர்களை எந்த வித வழக்கும் இல்லாமல் விடுவித்து விடுகிறோம், பதிலுக்கு வன்புணர்ச்சி புகாரை கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டுமாம். அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் கல்விமணியைப் பற்றித் தெரியவில்லை. அதில் ஒரு டிஎஸ்பி, சார், அந்த ஆட்கள் எல்லாம் திருடர்கள் அவர்களுக்குப் போய் சப்போர்ட் செய்கிறீர்களே என்று கேட்டிருக்கிறார். அதற்கு கல்விமணி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டாதீர்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அந்த டிஎஸ்பி, சார் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் என்ற உடனே கல்விமணிக்கு கோபம் வந்து விட்டது.

“தெரியும் சார் நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் லட்சணம். உங்களுக்கு தெரிந்ததெல்லாம் அடிப்பதுதான். கையில் சிக்குபவனை அடி அடி என்று போட்டு அடித்து, கண்டுபிடிக்க முடியாத வழக்குகளையெல்லாம் அவர்கள் தலையில் சுமத்துவதுதான் உங்கள் வேலை. உலகத்தில் பல நாடுகளில் பல்வேறு விசாரணை வழிமுறைகளை கையாள்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இன்னும் அடித்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறீர்கள். 22ம் தேதி கைது செய்யப் பட்டவர்களை சட்டவிரோதமாக காவலில் வைக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” என்று கேட்டிருக்கிறார்.
உடனே அந்த டிஎஸ்பி, “சார். சில வழக்குகளையெல்லாம் கண்டுபிடிக்க இப்படி இல்லீகல் கஸ்டடியில வச்சாத்தான் சார் முடியும்” என்றவுடன் கல்விமணி அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி விட்டு எழுந்து வந்து விட்டார்.
இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது தெரியுமா ? சனியன்று மதியம் புகார் கொடுக்க கல்விமணியோடு சென்ற அந்த பாதிக்கப் பட்ட நான்கு பெண்களையும் எஸ்.பி அலுவலகத்திலேயே வைத்து இரவு முழுவதும் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் மிரட்டியிருக்கிறார்கள். உங்கள் உறவினர்களை வழக்கு போடாமல் வெளியே விட்டு விடுகிறோம், கல்வி மணி உங்களைக் காப்பாற்ற மாட்டார் என்று மிரட்டியிருக்கிறார்கள்.
கல்வியறிவில்லாத அந்தப் பெண்கள், ஞாயிறன்று காலை நிலவரப் படி தங்கள் வாக்குமூலத்தை மறுத்து உள்ளனர். ஊடகங்களில் செய்தி பரபரப்பாக வெளி வரத் தொடங்கியவுடன், வேறு வழியின்றி இன்று போலீசார் மீது “ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, காயம் ஏற்படுத்துதல், திருட்டு” உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப் பட்டு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை அந்தப் பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்குக் கூட அனுப்பப் படவில்லை.
தற்போது காவல்துறையினர் பரப்பி வரும் செய்தி என்ன தெரியுமா வன்புணர்ச்சி நடக்கவேயில்லை. அந்தப் பெண்கள் இப்படி பொய்ப் புகார் கொடுத்தால் தங்கள் உறவினர்களை திருட்டு வழக்கிலிருந்து காப்பாற்றலாம் என்பதற்காக புகார் கொடுத்துள்ளார்களாம். வேலூர் சரக டிஐஜி சக்திவேலு, இந்தப் பெண்களை மிரட்டியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்திவேல் ஐபிஎஸ்
பொய்ப்புகாரோ இல்லையோ… முதலில் அந்தப் பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமா இல்லையா ? ஒரு வேளை பொய்ப்புகாராக இருந்தால், அது மருத்துவப் பரிசோதனையில் தெரிந்து விடுமே… காவல்துறையினருக்கு ஏன் அச்சம் ?
ஜெயலலிதா முதலமைச்சராக ஆனாலே காவல்துறையினருக்கு கொண்டாட்டம் தான். வீரப்பனை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பழங்கடியின மக்களை வேட்டையாடிய காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல், வீரப்பனை மோரில் விஷம் வைத்துக் கொன்று விட்டு என்கவுண்டர் செய்தோம் என்று மார்தட்டிக் கொண்ட போலீசாருக்கு இரண்டு லட்சம் ரொக்கம், இரண்டு க்ரவுண்டுகள் நிலம், ஒரு படி பதவி உயர்வு என்று வாரி வழங்கியவர்தான் ஜெயலலிதா.
கட்டுப்பாடு இல்லாமல் திரியும் இந்தக் காவல்துறையினருக்கு கடிவாளம் போடத் தவறினால், ஜெயலலிதா அரசுக்கு பொதுமக்களிடையே ஏற்படும் அவப்பெயரை தவிர்க்க இயலாது. குறிப்பாக ஒரு பெண்ணாக இருந்து பெண்கள் மீது காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற வன்முறைகளை ஜெயலலிதா இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களைய வேண்டும். காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள ஜெயலலிதா இந்தச் சம்பவங்களில் சம்பந்தப் பட்டுள்ள காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அதை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
|
Comments
ஓருQuoting vivekneutral:
one day police will come and f.... one of ur households, as a matter of finding a criminal. will u say this para at that incidence Mr. NEUTRAL?
TO THE PEOPLE WHO CRITICISE THE POLICE ACTION: do u think it is easy for them to find the criciminals without doing such things... it is the only easy way to find them.... if there is any alternative idea the people who criticise the police u give a better idea for them so that they will follow ur idea in the future... and no such issues will happen in the future ok..///
திருட்டு குற்றத்தை கண்டுபிடிக்க, சந்தேகத்திற்கு இடமான நபர்கள் பற்றிய விவரங்கள், அவர்கள் இருந்த இடங்கள், செய்த நடவடிக்கைகள், கைரேகைகள், சூழ்நிலை ஆதாரங்கள், போன்றவற்றை விசாரித்து தெரிந்து கொண்டு, குற்றம் புரிந்தவரை கண்டுபிடிக்காமல ், சந்தேகப்படும் நபரின் வீட்டைச்சேர்ந்த 4 இளம்பெண்களை, இரவில் வேனில் ஏற்றிச்சென்று காட்டில், நான்கு போலீஸ் நாய்கள் தனித்தனியாக நான்கு பெண்களையும் மிரட்டி படுக்க வைத்து வன் புணர்ச்சி செய்து, அரசு வேலையும், அதிகாரமும், லஞ்சபணத்தில் வாங்கித்தின்ன சோறும் கொடுத்த காமவெறியை தீர்த்துக்கொண்ட ு, தங்களுடைய ஆணுறுப்பை துடைத்துக்கொண்ட ால், திருடிய நபர்களின் மொத்த விவரங்களும் உடனடியாக தெரிந்து, திருடிய பொருளும் உடனே கிடைக்கும் என்று எந்த போலீஸ் பயிற்சியில், இந்த காமவெறி பிடித்த மிருக ஜென்மங்களுக்கு சொல்லிக்கொடுத்த ார்கள்? இப்படி ஒரு அதிநவீன விஞ்ஞான முறையில் விசாரித்து, குற்றங்களை குறைக்கத்தான் நாமெல்லாம் இந்த கேடு கேட்ட நாய்களின் சம்பளத்திற்காக மாதம் தோறும் வருமான வரி கட்டிக்கொண்டு இருக்கிறோமா?
ஆட்சில போலிஸ் அராஜகம்
இருக்கும் என்று மே மாசத்துக்கு முன்னாடி
உங்களுக்கு தெரியாதா . நீங்கதான வரிஞ்சி
கட்டி அந்த பொம்பளைக்கு வோட்டு கேட்டீங்க
hats off savukku.
Do not ever publish their photo like this. I feel really bad to see this.
Atrocious, outrageous & complete disregard for humanity...
These polices (animals) should be hanged...
Useless JJ, it seems she is gonna take vacation?, then why did she contest in elections?...
RSS feed for comments to this post