முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
துப்பாக்கியல்ல தீர்வு ,,, தினமணி தலையங்கம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 25 பிப்ரவரி 2012 07:03

 

சென்னையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித வலுவான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாமல், ஐந்து பேரைக் குற்றவாளிகள் என்று காவல்துறையே தீர்மானித்து அவர்களைச் சுட்டும் கொன்றுவிட்டிருப்பதை, கடமையைச் செய்திருக்கிறது காவல்துறை என்று அங்கீகரிக்க முடியவில்லை.

 

வழக்கமாக எல்லா என்கவுன்டர் மரணங்களிலும் நடப்பதுபோல, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். கதவை உடைத்ததற்கான அடையாளமோ கொலையுண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பெரிய அளவிலான போராட்டம் நடந்ததற்கான அடையாளமோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் அவர்களே அல்ல என்று தேசியக் காட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வேறு காட்டுகின்றன.

 

வங்கிக் கொள்ளையும், அதில் தொடர்புள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதும் அல்ல பிரச்னை. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை அதற்குப் போதுமான ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல், அவர்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கு உண்டா இல்லையா என்பதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.

 

குற்றவாளிகள் என்று கருதப்படும் ஐந்து பேரில் ஒருவரையாவது உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி இருந்தால், காவல்துறை தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது, நம்முன் ஓடுகின்ற கேள்வி, அந்த ஐந்து பேரில் ஒருவர் அல்லது இருவர் இந்தக் கொள்ளையில் தொடர்பே இல்லாதவராக இருந்திருந்தால், விவரம் தெரியாமல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரும் கொல்லப்பட்டிருப்பாரே, அது எந்த வகையில் நியாயம் என்பதுதான்.

 

""சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோதக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இதுபோல சில அதிகார அத்துமீறல்களை அங்கீகரிப்பதால், சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும்'' என்பது காவல்துறையினரின் வாதமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கும் துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்க முடியாது.

 

தீவிரவாதிகள், தேசத் துரோகிகள், சதித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களிடத்தில் காவல்துறை கையாளும் அணுகுமுறையை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் கையாளக் கூடாது. காவல்துறை என்கவுன்டரைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது தெரிந்தால் இதுவரை கத்தி, கைத்துப்பாக்கி என்று மட்டுமே செயல்பட்டு வரும் குற்றவாளிகள் இனிமேல் ஏகே 47, வெடிகுண்டு என்று தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அப்போது, அவர்களை எதிர்கொள்ளவே முடியாத நிலைக்குப் பழைய ரைபிள்களை வைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை தள்ளப்படுமே, அதை யோசித்துப் பார்த்தார்களா?

 

காவல்துறை சட்ட-ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக விரோதிகளை ஒடுக்கவும் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது உண்மை. சமூக விரோதிகளில் பெரும்பாலோருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை. முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற காவல்துறையினரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்காக, நீதி பரிபாலனத்தைக் காவல்துறையே எடுத்துக் கொள்வதா என்ன?

 

குற்றவியல் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமே, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்கூடத் தவறில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதானே தவிர, நூறு நிரபராதிகள் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்காகக் கொலை செய்யப்படலாம் என்று சொல்லவில்லை. சட்டத்தை மக்கள் எப்படிக் கையில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதேபோலக் காவல்துறையும் நீதிபரிபாலனத்தை, இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவர்களுக்குத் தண்டனை பிறப்பிப்பதைத் தனது கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது.

 

சமூக விரோதிகளை அடக்குவதற்கும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அத்துமீறுவதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைக் காவல்துறை தீர்மானித்துத் தீர்ப்பளிக்க அனுமதித்துவிட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அந்தத் துறை செயல்பட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்கவோ, விமர்சனம் செய்யவோ, உரிமையே இல்லாத ஒரு சூழலுக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை நகர்த்திவிடக் கூடும்.

 

முதல்வரின் பிறந்த நாள் பரிசாகக் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, ஐந்து பேரை விசாரணையே இல்லாமல் சுட்டுத் தள்ளி சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததாகக் கூறிக்கொள்ளும் சென்னை மாநகரக் காவல்துறை ஆட்சிக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

 

குற்றவாளிகள் என்று கருதுவோரை காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவது அல்ல, பெருகிவரும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வு. காக்கிகளின் கையில் லத்தி இருப்பதையே மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறும்போது, காவல்துறையினர் துப்பாக்கித் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

 

நன்றி - தினமணி

 

Comments  

 
0 #5 sridhar vasudevan 2012-03-22 18:21
எவ்னொ ஒருவன் படம் நினைவிர்கு வருது
சவுக்கு :-* :-* :-*
Quote
 
 
+1 #4 deepu 2012-02-29 16:40
இது போலிஸ் அராஜகம் தான். குற்றவாளிகளை கைது செய்ய மட்டுமே இவர்களுக்கு அதிகாரம் உள்ளது. மக்களை இவ்வளவு முட்டாள்களாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூட எண்ணி இருக்க மாட்டார்கள்.
Quote
 
 
+3 #3 thanavelrajan 2012-02-28 13:02
an excellent article by dinamani.savukku desrves appreciation for publicing it.it is the weakness,inabil ity,incapacity, immaturity of the DIG/ADGP/HOME SECRETARY/CS/COMMR OF POLICE CHENNAI,to maintain rule of law,that has taken the form of THIS ENCOUNTER.IN TAMILNADU, THE FACT THAT SINCE1969 THE POLICE DEPT FUNCTIONS UNDER THE CM HAS GIVEN THE FORCE THIS IMPUNITY.IF THEY FUNCTION UNDER THE CONTROL OF CS/HOME SECRETARY/SOME MINISTERS ,AS IN THE CASE OF OTHER STATES THEY WONT BEHAVE LIKE THIS. IN TAMILNADU ,POLICE DEPT WORKS AS THE SS TROPS OF THE POLITICIANS IN POWER THAN A CONSTITUTIONALY FORMED FORCE GOVERNED BY RULES. THE HUNGER AND CRAVING OF IPS OFFICERS FOR,POWER,AUTHO RITY,ILLEGAL GRATIFICATIONS, APPESEMENT ATTITUDE IS THE REASON FOR THE DEBACLE.OFCOURSE THERE ARE FEW GOOD OFFICERS .BUT THEY ARE SPINELESS.THIS IS THE CURSE OF TAMILNADU WHERE POSTINGS OF IPS OFFICERS ARE DECIDED NOT BY SENIORITY,MERIT , QUALITY, BY SENIOR OFFICIALS,BUT BY PETTY CORRUPT COTERIE THAT FORMS THE KITCHEN CABINET OF PETTY MINDED POLITICIANS WHO OCCUPY THE BERTHS, BY PEOPLESSSS MANDATE.SHAME ON ALL OF US.
Quote
 
 
+8 #2 jaya 2012-02-26 18:43
very good article. false encounter leads to further Confusion.
Quote
 
 
+18 #1 பிலால் 2012-02-25 10:41
நீதிதுறையின் ஆமை வேக செயல்பாடு - உங்களுடைய வாதத்தை ஏற்று கொண்டாலும் போலி என்கவுட்டர் செய்த போலீஸ் அதிகாரிகளை சட்டத்தினால் தண்டிக்க முடியுமா...? எப்போது .....?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 47 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2685
mod_vvisit_counterYesterday9271
mod_vvisit_counterThis week2685
mod_vvisit_counterLast week77827
mod_vvisit_counterThis month293331
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12815450