முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அன்புள்ள ராகுல் காந்தி, அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 34
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 07:37

உங்களுக்குத் தமிழ் தெரியாது. அப்புறம் ஏன் இப்படி ஒரு கடிதம்? வெட்டிவேலைதான். ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் நீங்கள் படித்துவிடப்போகிறீர்களா, படித்தாலும் உணர்ந்து செயல்படப்போகிறீர்களா என்ன?. நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான்.

RAHUL_GANDHI_1_1269639f

(தமிழ் தெரிந்த உங்கள் கட்சிக்காரர்கள் கூட இதைப்படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தத்தம் தரகுப்பணிக்கே நேரம் சரியாயிருக்குமே.)

முதலில் ‘பாரம்பரியம்’ மிக்க காங்கிரசின் துணைத்தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு’ மனங்கனிந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டியது மரபுதானென்றாலும் நீங்கள். என்ன சாதிக்கபோகிறீர்கள் என்று விளங்கவில்லை

சரி இதுவரை என்ன சாதித்தீர்கள்?:

இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/

புதுடில்லி நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு இப்படிப்போனது http://polldaddy.com/poll/6843586/?view=results&msg=voted

85 சதமானோர் உங்களால் ஒன்றும் ஆவப்போவதில்லை என்கின்றனர்.

அப்புறம் சர்வாதிகாரநாடான வடகொரியாவை ஒப்பிட்டு

http://www.livemint.com/Opinion/5ZDwGx807DFxwrkucLE4FL/The-Gandhis-and-the-Kims-India-North-Korea-bhaibhai.html

உங்களை சாடி, நையாண்டி செய்து எத்தனை எத்தனை பதிவுகள் இணையத்தில் ! நீங்கள் எதுவும் உருப்படியாகச் செய்யப்போவதில்லை, என்று நினைக்கும் என்னைப் போன்றோர்கூட பரிதாபப்படும் அளவுக்கு உங்கள் மீது தாக்குதல்கள். ஆனால் இதற்காக யாரை நொந்துகொள்வது?

மஹாராஜா வீட்டுப்பிள்ளையாய் பிறப்பதில் சில லாபங்கள் இருக்கின்றன. சிக்கல்களும் இருக்கின்றன. சிக்கல்களெல்லாம் உங்களை ஒரேயடியாய் ஒன்று சேர்ந்து உங்களை மூச்சுத்திணறச் செய்யும் நேரத்தில் நீங்கள் துணைத்தலைவராக முடிவு செய்திருக்கிறீர்கள். 2009ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதே நீங்கள் பிரதமராகும் வாய்ப்பிருந்தது. என்ன காரணத்தாலோ தவறவிட்டுவிட்டீர்கள். மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது அய்யமே. அவ்வாறு நீங்கள் பிரதமராகாமல் இருப்பது நாட்டுக்கு நல்லதா என்பது யார் அடுத்த பிரதமர் என்பதைப் பொறுத்தே!

தொடக்கத்திலிருந்தே உங்கள் வாழ்க்கை உங்களுடையதாக இல்லை எனச் சொல்லுவார்கள். உங்கள் தந்தையும் அரசியலுக்கு வரவிரும்பவில்லைதான். அவர் உண்டு விமானங்கள் உண்டு உங்கள் தாயார் உண்டு என்றிருக்கத்தான் நினைத்தார். உங்கள் தடாலடி சித்தப்பாதான் இதற்கெல்லாம் சரி என்றிருந்தார். ஆனால் என்ன செய்ய ? அவர் விபத்தில் இறக்க, உங்கள் பாட்டியும் கொல்லப்பட, காங்கிரசிற்கு நேரு குடும்பத்தைவிட்டால் வேறு ஆளே இல்லை பரிதாபகரமான நிலையில், ராஜீவ் பிரதமரானார்.

கம்ப்யூட்டர் யுகத்தைத் துவங்கப்போகிறேன் என்று முழங்கியவர் பீரங்கி ஊழலில் சிக்கி, பதவியையும் இழந்து பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பிருந்த நேரத்தில் எங்கள் தமிழ்நாட்டில் மனித வெடிகுண்டுக்கு இரையானார்.

உடன் பாட்மிண்டன் விளையாடியவர் பாட்டியை சுட்டுத் தள்ளுவதும், பிரச்சாரம் முடித்துவிட்டுத் திரும்பவேண்டிய தந்தை அங்கம் அங்கமாகப் பிய்ந்து போவதும் எல்லாமே கொடுமைதான். பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

அதனால்தானோ என்னவோ உங்களால் பள்ளியிலும் கல்லூரியிலும் சரிவரப் படிக்க இயலவில்லை, மற்றவர்களுடன் கலந்து பழகமுடியவில்லை. ஒரு கட்டத்தில் படிப்பிற்கே முற்றுப் புள்ளி வைக்க வேண்டியதாயிற்று.

உங்கள் பாட்டியார் கூட வீட்டில் கற்றவர்தான். ஆனால் அவர் வளர்ந்த சூழலே வேறு. பெற்றோரின் அருகாமையில்லாவிடினும், தாயை இளம் வயதிலேயே இழந்தாலும், அவர் பெரிய அளவில் அதிர்ச்சிகளுக்குள்ளானார் என்று கூறமுடியாது.

மாறாக உங்களைப் பொறுத்தவரை, முதலில் பாட்டி, பின்னர் தந்தை, படுகொலை செய்யப்படுகின்றனர்.

இன்னொரு புறம் இந்நாட்டுச் சூழலுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வதில் படாதபாடு பட்ட தாய், பிறகு காதலிக்கும் பெண்ணைக் கூடத் திருமணம் செய்துகொள்ள முடியாத சூழல் – செய்தால் இத்தாலி நாட்டுப் பெண்ணின் மகன் தானே, வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுவிட்டான் இவன் எப்படி இந்தியாவிற்கு விசுவாசமாயிருப்பான் என பரிவாரம் அலறும், எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதுமே பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ நடமாடவேண்டிய கட்டாயம். பாவம்தான் நீங்கள்.

விருப்பமில்லாமலேயே உங்கள் பெற்றோரிருவரும் அரசியலுக்குள் நுழைந்தனர். உங்களுக்கும் அரைமனதுதான். அதுதான் மிகப்பெரிய சிக்கல். ஆனால் இளைய ராஜா என்ற ஒளிவட்டம் வேண்டும், ஆள், அம்பு, சேனை என்று எல்லாவித வசதிகளும் ஆர்ப்பாட்டங்களும் வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். செய்யத் தவறிவிட்டீர்கள்

2004லிருந்தே நீங்கள் ஒரு முக்கிய புள்ளியாகப் பார்க்கப்பட்டீர்கள். 2009ல் காங்கிரஸ் உங்களுக்கே அடுத்து முடி சூட்டவிருக்கிறது என்பது தெளிவாகியது. இருந்தும் பிரதமராக மறுத்தீர்கள்,

அரசிலும் எவ்விதப் பொறுப்பும் ஏற்கவில்லை. ஏதோ வேண்டாவெறுப்பாக கட்சியின் பொதுச் செயலாளரானீர்கள். குறைந்த பட்சம் கட்சிக்குப் புத்துயிரூட்ட முயன்றீர்களா என்றால் இல்லை. ஏதோ இளைஞர் காங்கிரசை மாற்றிக்காட்டுகிறேன் என சூளுரைத்து களத்தில் இறங்கிய உங்களால் என்ன சாதிக்கமுடிந்தது. நீங்களே தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல. போகட்டும் மற்ற மட்டங்களில் எப்படித் தேர்தல்கள் நடந்தன, எம்மாதிரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

எம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாசன் அணிக்கும் சிதம்பரம் அணிக்குமிடையே குடுமிப்பிடி சண்டை. லட்சக்கணக்கில் செலவழித்தனர். நீங்களெல்லாம் ஜெயித்திருப்பது என்னால்தான் ஜாக்கிரதை என்று கார்த்தி தன் ஆதரவில் வென்றவர்களை மிரட்டினார். இவர்கள் எப்படி புதிய காங்கிரசிற்கு வித்திடமுடியும்

(நீங்கள் இங்கே செய்த ஒரே நல்ல செயல் கார்த்தி போன்ற படு அராத்துப் பேர்வழிகளை உங்கள் பிரதிநிதியாக அறிவிக்காததுதான்)

மூன்றாண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு கலந்துரையாடலின்போது உங்களிடம் கேட்கப்பட்டது: ”1985ல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் உங்கள் தந்தையார் கட்சியைத் தூய்மைப் படுத்தப்போவதாகவும், அரசியல் தரகர்கள் அகற்றப்படப்போவதாகவும் சூளுரைத்தார், ஆனால் அவர் இறுதியில் அத்தகைய தரகர்களுக்கு பலியானார். நீங்களும் இப்போது கட்சிக்கு மக்களுக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கப்போவதாகக் கூறுகிறீர்கள், மக்கள் விரும்புவதை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாற்றப்போவதாகக் கூறுகிறீர்கள். உங்கள் தந்தை தோல்விகண்ட ஒரு விஷயத்தில் வெல்லமுடியும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ?”

அதற்கு ஹா ஹூ என்று நீங்கள் குதிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் உங்கள் பதில் தெளிவாக இல்லை என்பதும் உண்மை. தந்தை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறமுடியாது எனப் பூசி மெழுகினீர்கள். கட்சி எப்படி இயங்குகிறதென்பதை சரிவர நீங்கள் உணராத நிலையிலேயே மேலும் மேலும் பொறுப்புக்கள் உங்கள் மீது குவிகின்றன.

உட்கட்சித் தேர்தல் நடத்தும்போது எந்த அளவு உண்மைத் தொண்டர்கள் இருக்கின்றனர், அவர்கள் என்ன நோக்கில் கட்சிக்கு வருகிறார்கள், தன்னெழுச்சியாக வருகின்றனரா இல்லை எல்லாமே ஆட்கடத்தல் வேலையா என்பதைப்பற்றியெல்லாம் நீங்கள் சரிவர விவாதித்ததாகத் தெரியவில்லை.

உங்கள் புரிதலில் இருக்கும் கோளாறின் ஆபத்துக்களை உத்திரபிரதேசத்தில் கண்டீர்களே

அங்கே  உங்கள் உழைப்பிற்கு ஓரளவு பலன் இருந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் தொடர்ந்து செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே.

மாயாவதிக்கெதிரான உங்கள் போர்க்குரலால் மிக அதிகப் பயன்பெற்றது முலாயம்சிங் குடும்பம்தான். அதற்கு மிக முக்கியக் காரணம் அவர்களுக்கு கட்சி அமைப்பு வலுவாக இருந்தது. உங்களுக்கு ஓரளவு கவர்ச்சியிருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தொண்டர்களில்லை என்பதை நீங்கள் எக்கட்டத்திலும் உணரவேயில்லை.

மாநில மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களை மதிப்பதேயில்லை என்று பகிரங்கமாகவே பலர் வருந்தினர், விளைவு படு தோல்வி.

இன்னமுமே நீங்கள் என்ன செய்கிறீர்கள், செய்யவிரும்புகிறீர்கள் என்று புரியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை பாதிக்கக்கூடிய முடிவுகளில் நிகழ்வுகளில் தலையிட்டு உங்கள் நிலைப்பாடு இது என்று தெளிவாகச் சொல்ல முன்வரவே இல்லை. ஒரே முறை லோக்பால் விவாதத்தின்போதுதான் மற்றபடி மௌனமே.

2009ன் முற்பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியபோது மஹிந்த அரசு விடுதலைப்புலிகளுடன் மோதுவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் பல முறை உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, கொடுமையை நிறுத்துங்கள், உங்கள் சகோதரி நளினியை சிறையில் சந்திக்கமுடிகிறது, அவரது மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்படலாம் என உங்கள் தாயே பரிந்துரை செய்கிறார். அதைப்போலவே நீங்களும் பெருந்தன்மையுடன் செயல்படவேண்டும். விடுதலைப்புலிகள் மீது உங்களுக்கும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் பொதுமக்கள் மடிவதைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என மன்றாடப்பட்டது. ஆனால் நீங்கள் செவி மடுக்கவே இல்லையே. விளைவு காங்கிரஸ் தமிழர்களின் மோசமான எதிரி என்ற உணர்வு தமிழர்களிடையே வேரூன்றி விட்டது.   திமுககூட தப்பிவிட்டது, நீங்கள் சிக்கினீர்கள்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் விஷயம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோதும் கூட, நீங்கள் உங்கள் மவுனத்தைக் கலைக்கவேயில்லை. நாளை இந்தியாவின் பிரதமராகும் கனவில் இருக்கும் நபர் இப்படி மவுனமாக இருக்கக் கூடாது.

மறுபடி மறுபடி நீங்கள் உங்கள் கட்சியையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை இந்த சமூகத்தையும்தான் என்பதே புலனாகிறது.

தவிரவும் ஸ்பெக்ட்ரத்திலிருந்து, நிலக்கரி சுரங்கப் பிரச்சினை உங்கள் அன்பு சகோதரியின் கணவர் மாட்டிய டிஎல்எஃப் விவகாரம் இப்படியாக பல்வேறு பெரிய சிறிய ஊழல்களில் உங்களுக்கும் பங்கில்லை என்று சொல்லிவிடமுடியாது.  இந்த ஊழல்கள் நடைபெற்ற போதும், அவை பொதுவெளியில் வெளிவந்தபோதும் அதற்கு உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதற்காகவே, பாராளுமன்றத்தை பல நாட்கள் நடத்த விடாமல் ஸ்தம்பிக்க வைக்க வேண்டியிருந்தது.   ஆனால், நீங்கள் இவையெல்லாம் நடைபெற்ற போது மௌனகுருவாக இருந்தீர்களே ஒழிய, தற்போது ஏற்றிருக்கும் துணைத் தலைவர் பதவிக்கு தகுதியான நபராக அப்போது நடந்து கொள்ளவில்லை.

இவ்வாறாக பலவழிகளிலும் உங்கள் பிம்பங்கள் உடைந்து சுக்குநூறாகியிருக்கும் வேளையில், மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு மக்கள் மனம் கொதித்திருக்கும் நிலையில் தனது நிர்வாகத் திறமையினால் பலரின் மனம் கவர்ந்திருக்கும் நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்க இருக்கும் நிலையில் நீங்கள் காங்கிரசை வழிநடத்த முன் வருகிறீர்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் நீங்கள் தோல்வியுற்று மாற்று தலைமையினை காங்கிரஸ் தேடுமானால் அது நாட்டிற்கு நல்லதே. வாரிசு அரசியல் முடிவுக்கு வரலாம்.

என் போன்றோரின் ஆரூடங்களைப் பொய்ப்பித்து உங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் நீங்கள் புதிய வழிகாட்டிவிட்டால், தனியாக சவுக்கு என் தலைமையிலேயே பாராட்டு விழா நடத்தும்.

இப்படிக்கு

இந்திய ஜனநாயகத்தால் ஏமாற்றப்பட்ட பல கோடி மக்களில்

ஒருவன்

 

Comments  

 
+2 #25 nanmaarran 2013-01-28 22:00
ராகுல் காந்தியின் அரசியல் வருகை என்பது,ஏதொ நேருவின் குடும்ப வாரிசு அரசியல் என எண்ணினால் அதிலும் நாம் ஏமாந்தே போவோம்.இது ஒரு திட்டமிட்ட சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் அரசியல் நகர்வு.ஏனெனில் 110 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், சுதேசி சிந்தனையும் தேசபற்றும் உள்ள ஒருவன் இந்தியாவின் தலைமை பொறுப்பிற்கு வந்துவிடகூடாது என்பதில் சர்வதேச நாடுகளூக்கு உள்ள சிந்தனையே காரனம்.
Quote
 
 
+4 #24 raguraam 2013-01-25 21:34
இவர் வட மாநிலங்களில் ஏழைகளின் வீட்டில் சாப்பாடு எல்லாம் சாப்பிட்டு அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட பாடுபட்டார் என்று தமிழக காங்கிரசின் பீட்டர் அவர்களோ கோபண்ணாவோ ஒரு பேட்டியில் சொல்லி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்? இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று சிலாகித்து இருந்தார்... அந்த பேட்டிக்குப் பின் அவர் என்ன செய்திருப்பார் என் எண்ணிப்பார்த்தே ன்.. சமீபத்திய சிறுத்தை படத்தில் கார்த்தியும் சந்தானமும் அவர்களை பார்த்தால் நல்லவர்களா தெரிவதாக ஒரு சேட்டுப்பெண் சொன்னவுடன் தனியாக போய் ஒரு பெஞ்சு மேல விழுந்து விழுந்து சிரிப்பார்களே! அப்படி சிரித்திருப்பார ்.. ஏனெனில் திரு பீட்டர் அவர்கள் ஒரு மிகச்சிறந்த அறிவாளி.. கலைஞரின் நன்பர்.. அவர் உண்மையாகவா சொல்லி இருப்பார் இதனால் நன்மை ஏற்படும் என்று? இப்படிப்பட்ட சால்ராக்களின் பேச்சுகளை நம்பும் அளவுக்கு ராகுல் நல்லவரா? இல்லை இவரது தாயார் முன்பெல்லாம் வாயில் சூயிங்கம்மை மென்றுகொண்டே கட்சி பிரச்சினைகளை கேட்பார் என்றும் அப்போது இவர்கள் பேசுவது அவருக்கு சுத்தமாக புரியாது, அனால் அவர் கேட்பது போல மென்றுகொண்டே தைலைய்யாட்டி அனுப்பிவிடுவார் என்றும் கேள்விப்பட்டிரு க்கிறேன்.. அது போல இது போதும் போங்கடா! இந்திய ஜனநாயகவாதிகளே! அப்படின்னு சொல்ல விழைகிறாரா?

ஆக இதுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்... ஆனாலும் நமது இந்தியாவில் இந்த தம்பி நல்லா வரும்... நல்ல்லாஆஆஆ வரும்.. ஏன்னா இந்தியாவின் தலை எழுத்து அப்புடி தான்....
வாழிய பாரதம்! வாழிய பாரத மணித்திரு நாடு!!!
Quote
 
 
+3 #23 raguraam 2013-01-25 21:34
இவரது மைத்துனர் மேங்கோ பீப்புள்—மேங்கோ டெமாக்ரசி என்று இந்திய மக்களை கிண்டலடித்தாரே! அதே கருத்து தானே இவருடையதும்.... இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி இவரிடம் கலந்துரையாடலில் இன அழிப்பு பற்றி உங்கள் கள்ள மவுனம் ஏன்?என்று கேட்டபோது, நானே 2 கூட்டங்களில் கண்டித்திருக்கி றேன் என்று கடிதம் எழுதுவது போல போஸ்
கொடுக்கும் நமது தமிழக தலைவர்களை தூக்கி சாப்பிட்டுவிட்ட ாரே! ஆக இதுவே நான் உங்களுக்கு செய்வது பெரிசு.. அதுக்கே நீங்கள் எனக்கு அதிகம் கடமைப் பட்டுள்ளீர்கள் என்கிற தொணிதானே அவருடையது? ஆறுகள் இணைப்பு, அனுசக்த்தி கொள்கை, வெளியுறவுக்கொள் கை, உள்நாட்டு பாதுகாப்பு, காங்கிரசின் ஊழல், மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என ஏதாவது ஒரு விஷயத்தில் தெளிவான நிலைப்பாடு எடுத்து அதனை சொல்லியோ செயலில் காட்டியோ இருப்பாரா இந்த இளவரசர்? இப்போதும் இந்த பதவி ஏற்பின்போது அப்பா போன்ற கெட்டப்புக்கு தன்னை மாற்றி தலைமுடி, கோட்டு போன்றவற்றில் மாற்றிக்காட்ட முயன்ற அளவுக்கு உருப்படியான செயல்திட்டத்தின ை எதாவது சொல்லி இருக்கலாமே!
Quote
 
 
+3 #22 raguraam 2013-01-25 21:31
மிக அருமையான நடுநிலையான பதிவு! திரு ராகுல் அவர்கள் இந்தியாவையும் இந்தியர்களைப்பற ்றியும் தவறான எதிர்மறையான புரிதலையே கொண்டுள்ளார்..
எப்படி என்றால்.. உ பி, பிஹார் போன்ற மாநிலங்களில் அவரது கட்சி சரியான கட்டமைப்பில், தொண்டர் பலத்துடன் இல்லை என்பதையும், மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் அறியாமல் இவர் போய் ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வீட்டில் சாப்பிட்டால் மட்டும் எல்லாவற்றையும் அன்றைக்கே இவர் புறிந்து, அறிந்து அவற்றை சரி செய்யும் திட்டத்தை வகுத்துவிட்டார் என்று மக்கள் நம்புவதாக இவர் நம்பினார்! இவர் செய்தது ஒரு நாளுக்கான நடிப்பு. அந்த நடிப்பினை நம்பியும் இவர் இந்தியாவின் இளவரசர் என்பதால் இந்த கிருஷ்ணபரமாத்மா பாதம் பட்டவுடன் உ பி, பிகார் குசேலர்களின் மாளிகைகள் பொற்கோலம் பூண்டுவிடும் என் மக்கள் நினைப்பதாக இவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டனர் இவருடன் இருக்கும் அதிமேதாவிகள்..அந்த ஒரு நாள் நடிப்புக்கு எத்தனை முன் ஏற்பாடுகள்? பாதுகாப்புகள்.. சாப்பாட்டுகு புதிய கிட்டுகள்..!
இவற்றை தவிர்க முடியாதுதான்.. அதனை உணர்ந்து இந்த சீன் 2010க்கு பிறகெல்லாம் எடுபடாது என்பதை உணர்ந்து இருப்பாரானால் இவர் ஒரு அறிவாற்றல் மிக்க நிர்வாகியாக வருவார் என்று நம்பலாம்… நம்ம ஊர் எம்ஜிஆர் படம் போல இவர் நடித்ததை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்.. மேலும் அடிக்கடி கெட்டப்புகளை மாற்றி (இன்னும் மரு வைக்கல)
ஏதோ நம்மை நம்ப வைக்க முயல்கிறார் என்பது புரிய வருகிறது. உ பி தேர்தலில் சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையை கிழித்து ஒரு நாடகம் நடத்தினார்.. இவர் ஏதோ அந்த கட்சி மீது பயங்கர கோபத்தில் இருப்பதாவும், அதற்கேற்ற கெட்டப்புக்காக தாடி எல்லாம் வளர்த்து அது ஒரு மாதிரி செட்டாகும் வரை காத்திருந்து அப்புறம் போடப்பட்ட நாடகம் அது. என்ன பலன் கிடைத்தது? இந்த நாடகம் நடந்த தொகுதியிலும் சரி, இவரது தளபதி ஊனமுற்றோர் உதவித்தொகை புகழ் குர்ஷித் தொகுதியும் சரி குப்புற தானே விழுந்தது?
Quote
 
 
+1 #21 kumaravelu 2013-01-24 14:20
அன்பு சவுக்கு
இப்பொது திருப்தியா? உஙகல் வார்த்தை பிரயயொகம் பிரமாதம் அதிலும் அராத்து பேர்வழி என்ர வார்த்தை மிக பிரமாதம் மத்திய்ல் வலுவான ஒர் எதிர்கட்ஷி இல்லாதவரை காங்ரச் காட்டில் மழை.னீஙகல் வருத்த பிரகு சுவை ஜொர்
Quote
 
 
+2 #20 arunyog 2013-01-23 20:49
எல்லாம் சரியாத்தாம்ப்பா நடக்குது

கேணப்பயலுவ இருக்கிற நாட்டுல கிறுக்கு
பய ஆட்சியிதான் நடக்கும்
Quote
 
 
+3 #19 ambaanidhaasan 2013-01-23 19:15
வினையையும் விதையையும் விதைத்தவன் அதையே அறுப்பான்!!
பார்ப்போம்... கலைஞர் என்ன அறுவடை பண்ணுறார்? அம்மா என்ன அள்ள போறாங்க? டண்டனகா கேப்டனுக்கு என்ன கிடைக்குது? 2014ல அப்புடின்னு பார்போம்.. மக்கள் ஏமாளிகள் தான்.. ஆனால் கடவுள் என்று ஒருவன் இருந்தால் தக்க பதில் கிடைகனும் இல்ல..............?
Quote
 
 
+7 #18 ambaanidhaasan 2013-01-23 19:12
ஓ!! இவுரு தானா அவுரு! முந்தானாளு ஒரு போத பார்டி எங்கூரு முக்குல நின்னு எல்லாருக்கும் சவால் உட்டுனுருந்தான் ... மேட்டர் என்னான்னா இந்தியாவ கீழ உழுவாம தாங்கி தன் தோள் மேல பிடிக்க ஒரு பெரிய பாடி பில்டரை காங்கிரசு இறக்கி விட்டுருக்கறதா சொல்லி வாந்தி எடுத்தான்..... இவுரு தானா இந்தியாவ தோள் மேல தாங்குற பாடி பில்டர்?? ஆனா ஒன்னு... இவுரு அதுக்கு சரிபட்டு வரமாட்டார்... இதுக்கு இப்ப இருக்குற கீ போம்மை தான் லாயக்கு... வீணா எமாறாதீங்க... சொல்லிபுட்டேன்....
Quote
 
 
+1 #17 AAR 2013-01-23 14:49
Now I get it.

Nothing to show as achievement!!
Quote
 
 
+4 #16 PENIGABI 2013-01-23 11:12
பைபிள் வாசகம் ஒன்று கூறுவது "நீங்கள் எதை விதைக்கிறீர்களோ . அதையே அறுப்பீர்கள்". ராகுல் குடும்பம் செய்தது எதுவோ, அதுவே அவர்களுக்கு திரும்ப கிடைக்கும்.

மிகவும் அருமை.
Quote
 
 
0 #15 Anniyan 2013-01-22 21:47
அன்புள்ள சவுக்கு அவர்களுக்கு,
சமீபத்தில் துபாயில் நடந்த மரண தணடனை பற்றீ உன்கல் கருத்து என்ன? நீஙகல் மரணதன்டனை கூடாது என்ற கருத்துல்லவர். அதனால் கேட்கிரென்.

http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/

http://thinnai-1jaykumar.blogspot.com/2013/01/blog-post.html
Quote
 
 
-2 #14 நெல்லை பாலாஜி 2013-01-22 19:42
என்ன சவுக்கு..தடுமாற்றம் தெரிகிறதே ....யாரிடம்??? உங்ககிட்டதான் பாஸ்...மோடி மஸ்தான் நிர்வாக திறமையா?? அப்படியானால் ஜெயா கூட திறமைதானே !!!!. குஜராத் ஒளிர்கிறது என தின------- பாணியில் கூறுவதன் நோக்கமென்ன??? குஜராத்தின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படி கனவிலும் கூற மாட்டார்கள்...

அடுத்து, "ஓரளவு கவர்ச்சியிருந்த ும்"...என்ன கொடும இது..பிளாஸ்டிக் பெட்டியில் மண் சுமந்தால் மக்கள் பணியா?? சும்மா எம் ஜி யார் காலத்து பிலிம் வேலைய இப்போ காட்டி, நானும் சாதாரண மனிதன் என்று பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு,ம ட மாளிகையில் வாழ்ந்து கொண்டு உதார் விடுகிற பேர்வழி இந்த பால் மனம் மாற பாலகன்...

என்னடா இவ்வளவு பெரிய கட்டுரையில் இந்த இரண்டு வரிகளில் என்னடா இவனுக்கு பெரிய பிரச்சனை என கேட்கலாம்..இப்படி எழுதுவது தின ----,ஆர் எஸ் எஸ் பாணி...அதாவது, கட்டுரையின் சில இடங்களில் அவர்களை பற்றி நல்ல விதமாக எழுதுவது ..அது மொத்த கட்டுரையின் திசையை மாற்ற வல்லது ..
Quote
 
 
+1 #13 alex25 2013-01-22 18:49
//இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/
-- Site taken down.//

Site அப்படியேதான் உள்ளது.. பக்கம்தான் காலியாக உள்ளது...சற்று யோசித்துப் பாருங்கள்... புரியும்
Quote
 
 
0 #12 inigoanto xavier. 2013-01-22 18:29
வனக்கம் சவுக்கு அவர்கழுக்கு.அருமையான யொசனை.
Quote
 
 
+5 #11 AAR 2013-01-22 15:49
இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/
-- Site taken down.
Quote
 
 
+14 #10 AAR 2013-01-22 15:43
நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான்.
-- Sense of humour.
Quote
 
 
+6 #9 karthikPrabhakaran 2013-01-22 15:04
அன்புள்ள சவுக்கு!!

ஏற்கனவே நீங்கள் பிரசுரித்த , (இணைப்பில் உள்ளது).கடிதத்தை படிச்சிருந்தாலே மான ரோஷம் இருந்திருந்தா ஊர விட்டே ஓடி இருக்கணும். இல்ல எதுலயாவது தொங்கி இருக்கணும். அதுக்கே திருந்தாத ஆளா இதுக்கு திருந்த போறாரு??????



இதை தவற விட்ட ரசிகர்கள் இதை தவறாமல் படிக்கவும்........

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1201:2011-09-01-04-24-54&catid=10:2010-10-16-14-42-56&Itemid=3
Quote
 
 
+2 #8 M.S.Chagla 2013-01-22 14:50
It's a tall order. But Rahul is another one dropout like Rajiv Gandhi whose brain is beyond his own comprehension. Let us put an end to this dynastic rule of Congress.
Quote
 
 
+7 #7 ஊர்க்குருவி. 2013-01-22 14:42
அன்பான ராகு அவர்களே உங்களை கலப்படமானவர் உங்களுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று இந்தியர்கள் பலரும் மறைமுகமாக முகம் சுழிக்கின்றனர். உங்கள் தாயார் இத்தாலியர், உங்கள் தகப்பன் ராஜிவின் தந்தை ஈரானிய இனத்து (பொரஸ்கான்) முஸ்லீம் என்கின்றனர். உங்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்றும் கூறப்படுகிறது, உங்கள் கட்சி ஊழல் உற்பத்திக்கட்சி என்று பிரகடனப்படுத்தப ்பட்டுவிட்டது. இன்றிருக்கும் நிலையில் நீங்கள் பிரதமர் போட்டியில் இறங்கி தோல்வியடைந்து அவமானமடைவதற்காட ்டிலும் உங்கள் குடும்ப நண்பன் திரைக்கதை வசனகர்த்தா தாத்தா கருணாநிதியை வைத்து திரைக்கதை எழுதி, கிழவன்களான ரஜனிகாந்த் அமிதாப்பச்சன் இருவரையும் வண்டியில் பூட்டி நீங்கள் சாரதி வேடமிட்டு தாத்தாவையும் பாட்டி சோனியாவையும் வண்டியில் ஏற்றி தேர்தல் பிரச்சார ஊர்வலம்போவதுபோல ஒரு காட்சியை உருவகப்படுத்தி திரைப்படமாக எடுத்தீர்கள் என்றால் நீங்கள் இப்போ இருக்கும் செல்வாக்கையும் சேர்த்து சுப்பர் ஸ்ரார் லெவலுக்கு உயரலாம் அதன்பின் நீங்கள் அரசியலில் சாதித்து விட்டு பிரதமர் கனவை உறுதி செய்யலாம் இப்போதைக்கு உங்களுக்கு பிரதமர் வேலை சரிப்பட்டு வராது என்பதே சவுக்கு உட்பட தமிழ்நாட்டின் மாற்றுச்சிந்தனை யாளர்களின் கருத்து படம் இன்னும் பரிமளிக்கவேண்டு ம் என்றால் இடைருகலாக ராசாத்தி அம்மாள்ள்ள், கனி அக்கா, குஷ்பு ஆகியோரையும் நீங்கள் கூட்டுச்செர்த்த ுக்கொள்ள முடியும் தாத்தா அனைவற்றிற்கும் ஓத்துழைப்பார்.
Quote
 
 
+14 #6 Eleventh Sense 2013-01-22 13:46
பைபிள் வாசகம் ஒன்று கூறுவது "நீங்கள் எதை விதைக்கிறீர்களோ . அதையே அறுப்பீர்கள்". ராகுல் குடும்பம் செய்தது எதுவோ, அதுவே அவர்களுக்கு திரும்ப கிடைக்கும்.
லட்சோப லட்சம் இலங்கை சகோதிரிகளின் கதறலும் கண்ணீரும், ஆயிரக்கணக்கில் மடிந்த எம் சகோதர தமிழக மீனவர்களும்,
காசுக்காக நாட்டையே விற்க துணிந்த தி மு க ராசாக்களும்,
ஓட்டுக்காக உளறுகின்ற நாரயநசாமிகளும்...
உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பார்க ள் இளவரசரே............
இந்த சாபத்திலிருந்து இநதியா விடுதலை பெற வேண்டும் என விரும்புகிறேன். நல்ல பகிர்வு சவுக்கு...............
Quote
 
 
+1 #5 thaleevar 2013-01-22 12:09
super savukku
this is 100% true
Quote
 
 
+6 #4 Kishore 2013-01-22 11:32
காங்கிரஸ் கிழடுகளால், பலி ஆடாக, ஆக்கப்பட்டுள்ளத ை கூட உணர முடியாத இந்த அப்பாவிதான், அடுத்த பிரதமர்.
Quote
 
 
+8 #3 குட்டி 2013-01-22 11:24
இந்த ஊரு நம்மள இன்னுமா நம்பிட்றுக்கு...
Quote
 
 
+24 #2 karthikPrabhakaran 2013-01-22 11:03
தம்பி ராகுல் கண்ணா !!!!! போப்பா போ !!!வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரச் சொல்லுப்பா !!! இங்க எல்லாம் வரக் கூடாதுப்பா ....பந்து படாத எடத்துல பட்ருமில்ல !!!!!!
Quote
 
 
+13 #1 Padmanan 2013-01-22 08:17
சவுக்கு அவர்களே,

நாம் அனைவரும் சொல்வது சரிதான். இந்த தேசத்தின் தேவைகள் எதையும் புரிந்துகொள்ளாத வர், மெச்சத் தகுந்த அளவிற்கு புத்திசாலித்தனம ில்லாதவர், யாரோ எழுதிகொடுத்ததை ஒப்பிக்கும் மனிதர் என பல சொல்லலாம்.

அதுமட்டுமின்றி இவர் இனி எந்த காலத்திலும் மக்களை தன்பக்கம் கவர்ந்திழுக்கும ் திறமையை கொண்டிருக்கப்போ வதில்லை. இவர் ஒரு சராசரி ராஜா வீட்டு கன்றுக்குட்டி. அதே சமயம் எதிர்கட்சிகளில் சரியான தலைவர் இல்லாமல் ஒரு வெற்றிடம் இருப்பதை இவர் சாதகமாக்கிக்கொள ்ள வாய்ப்பிருக்கிற து என்பது உண்மைதானே?

மோடி மந்திரம் எல்லா மாநிலங்களிலும் பலிக்காது. ஜெயலலிதாவின் பேராசை பலிப்பதும் கடினம். மம்தா பானர்ஜிக்கும் சாதுர்யம் கிடையாது. நிதிஷ்குமார், நவின் பட்நாயக் மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள்தான் அடுத்து வரும் அரசை தீர்மானிப்பார்க ள். இருக்கும் இந்த ஒரு வருட காலத்தை யார் சரியாக பயன்படுத்திக்கொ ள்கிறார்களோ, அவர்களே மத்தியில் பெரும் சக்தியாக உருவெடுப்பார்கள ். அடுத்து வரும் மத்திய அரசு கண்டிப்பாக அரசியல் தலைவர்களால்தான் தீர்மானிக்கப்பட ும். மக்கள் போய் சும்மா ஓட்டு போடுபவரகளாகத்தா ன் இருப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகே நமக்கு யார் பிரதமர் எனத்தெரியவரும் ஒரு போலியான ஜனநாயக நாடுதான் இந்தியா. ராகுல் பிரதமர் பதவியில் அமரவே முடியாது என உறுதியாக சொல்ல நம்மிடம் எதுவுமே கிடையாது. எவ்வளவு இறங்கி போராடினாலும் சரி.. எதுவும் நடக்கும் நாடுதான் நம்நாடு. பாருங்க... வதேரா கதை அப்படியே அமுங்கிடுச்சி. ஊடகங்கள் இப்பொழுது வாய்திறப்பதே கிடையாது. தில்லி ஊடகங்களும் நீங்கள் சொல்லும் டார்க் ரூம் மோசடியை செய்பவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ராகுல்தான் இந்தியாவை தோலில் சுமக்கப் போகிறார் என இவர்கள் சொன்னாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 146 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday13300
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week56027
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month258759
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12780878