|
சகாயம், கண்ணப்பன், ஆஸ்ரா கர்க்... இந்த மூன்று பேரும்தான்

தமிழகத்தில் இன்றைய சூழலில் யாருக்கும் தலை வணங்காத வணங்காமுடிகள்!
மதுரையில் அழகிரியைத் தாண்டி எதுவும் நடக்காது என்பது எழுதப்படாத விதி. ஆனால், இந்த மூவரும் அந்த விதியைத் திருத்திப் புதிய தீர்ப்புகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்த வந்த பாதையைப்பற்றி சில நினைவுக் குறிப்புகள்...
சகாயம் (மதுரை மாவட்ட கலெக்டர்): புதுக்கோட்டை அருகே உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சகாயம். இவரது ஒரே பிரச்னை - நேர்மை!
நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, தனது சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டு, ஒட்டுமொத்த அதிகாரிகளின் கோபத்தை சம்பாதித்தார். காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாக இருந்தபோது, பெப்ஸி பாட்டிலில் குப்பை இருப்பதாக ஒரு பெரியவர் புகார் செய்ய... அந்த கம்பெனிக்கு சீல் வைத்ததும் சகாயம்தான்!
கோவையில் சென்ட்ரல் எக்ஸைஸ் டெபுடி கமிஷனராக இருந்தபோது, அவரது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, மருத்துவமனையில் சேர்த்தார். அவர் கையில் இருந்ததோ 1,000-தான். அந்த சமயத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த 650 பிராந்தி கடைகளின் லைசென்ஸ்களைப் புதுப்பிக்க, 65 லட்சங்களோடு கடைக்காரர்கள் காத்திருந்தார்கள். யாருடைய மனதாக இருந்தாலும், அந்த நேரத்தில் சபலப்படும். ஆனால், சகாயம் அதைப் பொருட்படுத்தாமல், தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி மருத்துவச் செலவை சமாளித்தார்!
''அதிகாரிகள் சில வருடங்கள் நேர்மையாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. சர்வீஸில் இருந்து ஓய்வு பெறும் வரைக்கும் அந்த நேர்மையைத் தொடர வேண்டும். அப்போதுதான் நாம் நேர்மையாக இருந்ததாக அர்த்தம். நான் நேர்மையாகத்தான் இருந்தேன். இனியும் இருப்பேன்!'' நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார் சகாயம்!
கண்ணப்பன் (மதுரை மாநகர போலீஸ் கமிஷனர்): தமிழில் மட்டும் இல்லை... உலகத்தில் இருக்கும் எந்த மொழியிலும் கண்ணப்பனுக்குப் பிடிக்காத வார்த்தை 'சிபாரிசு!’
நியாயமான விஷயம் என்றால், சாதாரண ஆள் வந்து புகார் கொடுத்தாலும், உடனே காரியத்தை முடித்துக் கொடுப்பார். ஆனால், உண்மைக்குப் புறம்பான விஷயத்துக்கு எங்கு இருந்து பிரஷர் வந்தாலும், 'ஸாரி... என்னால் முடியாது!’ என்று பொளேரெனச் சொல்வார்.
கண்ணப்பன் நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி-யாகப் பணி ஆற்றியபோது அவர் மகன் தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் செல்வார். ஒரு நாள் கண்ணப்பன் வெளியே வந்திருக்கிறார். பையனது சைக்கிள் வாசலிலேயே இருந்தது. போலீஸ் ஜீப்பைக் காணோம். விசாரித்தபோது, மகன் ஜீப்பில் போனது தெரிய வர... உடனே டிரைவரைக் கூப்பிட்டு, 'இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது’ என எச்சரித்தார்.
சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஐ.ஜி-யாக இருந்தபோதுதான், சேலத்தில் நடந்த ஆறு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அவரைக் கைது செய்ய உத்தரவு போட்டது இதே கண்ணப்பன்தான்.
''சட்டத்துக்கு முன்னாடி எல்லோரும் ஒண்ணுதானே... அது அமைச்சரா இருந்தா என்னா, ஆண்டியப்பனா இருந்தா என்ன?'' என்று கேட்பாராம் கண்ணப்பன்!
ஆஸ்ரா கர்க் (மதுரை எஸ்.பி.): பஞ்சாப் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆஸ்ரா கர்க், எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானதும் வேலூர் மாவட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால், அவரது அதிரடி நெல்லையில்தான் தொடங்கியது. காரணம், அப்போது டி.ஐ.ஜி-யாக இருந்தவர் கண்ணப்பன்.
அவரிடம் பால பாடம் படித்ததால், நேர்மை, எளிமை, கண்டிப்பு, துணிச்சல் என அத்தனையும் கர்க்கிடம் மிளிரத் துவங்கின. இவரின் பலமே, மக்களோடு நேரடித் தொடர்புதான்.
நெல்லை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றபோது, மாவட்டம் முழுவதும் கந்து வட்டியும், சாதி மோதலும் தலை விரித்து ஆடின. சிலை உடைப்புகள், பழிக்குப் பழி கொலைகள் என சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்தில் கிடந்தது. அதனைச் சரிப்படுத்தினார்.
காற்றாலைத் தொழில் வேகமாகப் பரவி வருவதால், பெரிய நிறுவனங்களுக்காக, அடுத்தவர்களின் சொத்துகளை அபகரிக்கும் வழக்குகள் அதிகம் உண்டு. அவை கோர்ட்டுக்குக்குப் போனால், பல ஆண்டுகள் நடக்கும். ஆனால், ஆஸ்ரா கர்க்கின் கண்டிப்புக்குப் பிறகு அத்தகைய மோசடிகள் முழுமையாக நின்றன!
''மக்களுக்குச் சேவை செய்யவே, இந்த வேலைக்கு வந்திருக்கிறோம். அதை தைரியமாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும். பூச்சாண்டி காட்டுபவர்களுக்குப் பயப்பட்டால், வேலை பார்க்க முடியாது!'' என புன்னகைப்பார் ஆஸ்ரா கர்க்.
இந்த மூன்று பேர் மீதுதான் வழக்குத் தொடரப்போவதாக சொல்லி இருக்கிறார் அழகிரி.
கலி முத்திடுச்சு!
நன்றி ஜுனியர் விகடன்
|
Comments
i like this good job
hands up to these officers.im worried because in India now tomuch corruption,poli ticians are like mafias.because im owkring 5 yrs in abroad but still now i hve no house,but MLS,Ministers,M PS running engineering college with his low salary.How can it is possible???? monthly im getting 4 lacs.
We will wish their sucesses in future.
RSS feed for comments to this post