|
டேபிளில் கிடந்த சர்வே ரிப்போர்ட்களைப் புரட்டினார் கழுகார்!
தமிழகத் தேர்தல் கணிப்பு பற்றி பல்வேறு மீடியாக்களில் வந்த விவரங்களைப் பார்த்துவிட்டு, நம் பக்கம் திரும்பினார்.
''25 வருடங்களாகத் தமிழகத் தேர்தல்களை சந்தித்து களம் பல கண்ட கழுகாரே... இந்தத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே பாக்கி! வாசகர்களுக்காக, நீர் உமது கணிப்பைச் சொல்லக் கூடாதா?'' என்றோம்!
''தி.மு.க. - அ.தி.மு.க. இரண்டு கூட்டணிகளின் வெற்றி - தோல்வி பற்றிய கிராஃப் அநியாயத்துக்கு ஏற்றமும் இறக்கமும் ஆக இருக்கிறதே! எந்த தேதி நிலவரத்தை நான் சொல்ல? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் அ.தி.மு.க-வுக்குக் கிடுகிடுவென ஏறு முகம். வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தபோது, இறங்கு முகம். வை.கோ-வை விலக்கியபோது, மேலும் இறங்கு முகம், அ.தி.மு.க-வுக்கு. அதே நாளில், தி.மு.க-வில் கவர்ச்சித் திட்டங்களுடன் இலவச அறிவிப்புகள் வெளியானபோது, தி.மு.க-வுக்கு இமேஜ் கூடியது. ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத்துக்குப் பிறகு, இந்தப் பக்கம் ஏறுமுகம்... இப்படியாக, மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி, தி.மு.க. - அ.தி.மு.க இரண்டு கூட்டணிகளும் 50 சதவிகிதம் என்கிற அளவில் சம பலத்தில் இருந்தன.''

''சரி, ஏப்ரல் 6-ம் தேதி நிலவரத்தைச் சொல்லும்?''
''லேட்டஸ்ட்டாக, மத்திய-மாநில உளவுத் துறையினர் எடுத்த சர்வே விவரங்களைக் கேள்விப்பட்டேன். அதை உமக்குக் சொல்கிறேன்! மாநில உளவுத் துறையினர் எடுத்த சர்வேயில் தி.மு.க. கூட்டணிக்கு 89 ஸீட்கள் கிடைக்கும் என்று வந்திருக்கிறது. அதாவது, இதில் 59 ஸீட்களில் தி.மு.க. வெற்றி பெறுமாம். காங்கிரஸ் 17, பா.ம.க. 10, விடுதலைச் சிறுத்தைகள் 2, கொ.மு.க. 1... ஆக மொத்தம் 89 வருகிறதாம். அ.தி.மு.க. கூட்டணிக்கு 132 ஸீட்கள் கிடைக்கலாமாம். இதில், அ.தி.மு.க. 95 ஸீட்கள் வருமாம். தே.மு.தி.க. 19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7, இதர கட்சிகள் தலா ஒன்று வீதம் 3 ஸீட்கள் என்று கணக்குச் சொல்கிறார்கள். 13 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறதாம்.''
''மாநில உளவுத் துறையின் கணக்கா இது! மத்திய உளவுத் துறையின் சர்வே என்ன சொல்கிறதாம்?''
''தி.மு.க. கூட்டணிக்கு 112 ஸீட்கள் கிடைக்கும் என்கிறது ஐ.பி.! இதில் தி.மு.க-வுக்கு 67, காங்கிரஸ் 28, பா.ம.க. 14, விடுதலைச் சிறுத்தைகள் 2, கொ.மு.க. 1 என்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு 122 ஸீட்கள் கிடைக்கும். இதில், அ.தி.மு.க. 88 இடங்களைப் பெறும். தே.மு.தி.க. 20, மார்க்சிஸ்ட் 7, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, இதர கட்சிகள் தலா ஒன்று வீதம் 2 ஸீட்கள் என்று முன்னணியில் இருக்கிறதாம்.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடும் ஆலங்குடி, மருங்காபுரி, ஒசூர், பேராவூரணி போன்ற சில தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னணியில் வருகிறார்களாம்.''
''தமிழகத்தில் அமையப்போவது கூட்டணி ஆட்சிதான் என்பதை இந்த இரண்டு கணிப்புகளும் சொல்லாமல் சொல்கின்றனவா?''
''இந்தக் கணிப்புகளை வாங்கிப் பார்த்த கருணாநிதி, ரொம்பவே மனம் தளர்ந்துவிட்டாராம். 'தி.மு.க. தனிப்பட்ட முறையில் 90 இடங்கள் வரைக்கும் வந்தால்தான், கூட்டணியில் சிலரையும் சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியும். ஆனால், இவர்கள் யாருமே அந்த அளவுக்குச் சொல்லவில்லையே’ என்று வருத்தப்பட்டாராம். இந்த நிலையில்தான் அவருக்கு இன்னொரு கணிப்பும் வந்து, வருத்தத்தை இன்னும் அதிகப்படுத்தியது...''
''அது யார் எடுத்தது?''
''யார் எடுத்ததோ தெரியாது! ஆனால், தி.மு.க. சார்பில் எடுக்கச் சொன்னது என்பது மட்டும் உண்மை. அந்தக் கணக்கைப் பார்த்ததும், கருணாநிதிக்கு தூக்கி வாரிப் போட்டதாகச் சொல்கிறார்கள். தி.மு.க. கூட்டணி 110 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 95 இடங்களையும் கைப்பற்றுமாம்.''


''அம்மா கட்சியைவிட அய்யாவுக்கு அதிகமாகத்தானே கிடைக்கப் போகிறது! இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?''
''முழுதும் சொல்லி முடிக்கிறேன்! 110 இடங்கள் கூட்டணி ஜெயிக்கும் என்று சொன்னாலும், அதில் தி.மு.க. அதிகபட்சம் 47 இடங்கள்தான் பெறும் என்றதாம் அந்த சர்வே! காங்கிரஸ் கட்சி 27, பாட்டாளிகள் 25 விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குகள் சேர்ந்து 11 தொகுதிகளைப் பிடிப்பார்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், அ.தி.மு.க. தனிப்பட்ட முறையில் 70 இடங்களைப் பிடிக்கலாம் என்றதாம். 'நாம எடுக்கச் சொன்ன ரிசல்ட்டே இப்படி இருந்தால், இதுதான் உண்மையானது’ என்றாராம் கருணாநிதி. பெரும்பாலும் மந்திரிகள்தான் மண்ணைக் கவ்வுகிறார்களாம். நான்கைந்து பேரைத் தவிர அத்தனை பேரும் இழுபறி என்று வந்திருப்பது கருணாநிதியை வருத்தமடையவைத்தது.''
''அதனால்தான், காங்கிரஸ் கட்சியுடன் அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்ட ஆரம்பித்து இருக்கிறாரா கருணாநிதி?''
''இனி வரும் காலங்களில் தமிழக அரசியலில் முக்கியமான சூத்திரதாரியாக மாறப்போகிறார் குலாம் நபி ஆசாத். வட சென்னையில் நடக்கும் கூட்டத்துக்கு அவரும் நிச்சயம் வரவேண்டும் என்று கருணாநிதி கட்டாயப்படுத்தி வரவைத்தார். கருணாநிதி மேடைக்கு வந்து இரண்டு மணி நேரம் கழித்துத்தான் குலாம் நபி வந்தார். 'டெல்லியில் இருந்து நாம் எதிர்பார்ப்பது எல்லாம் தாமதமாக வருவதைப்போல, குலாம் நபி வந்துள்ளார்’ என்று கருணாநிதி கிண்டல் அடித்தாலும்... 'இனி வரும் காலங்களில் எங்களுக்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்’ என்று கெஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டார். அப்போது குலாம் நபி ஆசாத்திடம் ஒரு கத்தைத் தாள்களை கருணாநிதி கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்து, தனது பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டார் ஆசாத்.''
''என்ன இருந்ததாம் அதில்?''
''மறுநாள்தானே சோனியா கலந்துகொள்ளும் தீவுத் திடல் கூட்டம். தன்னுடைய கோரிக்கைகளாக எதை எல்லாம் வைக்கப்போகிறேன் என்று கருணாநிதி அதில் குறிப்பிட்டு இருந்தாராம். அதற்கான பதில்களை சோனியா சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருணாநிதி எதிர்பார்த்தாராம்.''
''கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக ஜனவரி 30-ம் தேதி டெல்லி சென்ற கசப்பான தினத்துக்குப் பிறகு இப்போதுதானே இருவரும் சந்திக்கிறார்கள்?''
''ஆமாம்! அவர்கள் மறக்க நினைப்பதை, நீர் ஏன் எடுத்துக் கொடுக்கிறீர்? சோனியாவும் கருணாநிதியும் மேடைக்கு வருவதற்கு முன்னால், லைட் மியூஸிக் ஏற்பாடு செய்திருந்தார்கள். 'வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்! தரை மீது காணும் யாவும்... தண்ணீரில் போடும் கோலம்... நிலைக்காதம்மா!’ என்ற சோகப் பாடல் இசையாக மேடையில் ஒலித்தது அபத்தமாக இருந்தது. சோனியா மேடைக்கு வருவதற்கு முன்னதாக மேடைக்குக் கீழேயே கருணாநிதியுடன் சிறிது நேரம் பேசினாராம். 'மீண்டும் முதல்வர் ஆக வாழ்த்துகிறேன்’ என்று சோனியா சொல்ல, கருணாநிதியும் பூரித்துக்கொண்டாராம். முந்தைய நாள் கொடுத்த ஹின்ட்ஸ் படி, கருணாநிதி 'தற்செயலாக’ சொன்ன விஷயங்களுக்கு சோனியாவும் 'தற்செயலாக’ ஓகே சொல்லிப் பேசினார்.''
''கோவையில் நடந்த அனைத்துக் கட்சிப் பொதுக் கூட்டத்துக்கு விஜயகாந்த் வரவில்லையே?''
''அவருக்குப் பதிலாக பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பிவைத்தார் விஜயகாந்த். 'ஒரு கூட்டத்துக்காக கோவை வந்தால் 11 ஊர் மக்களை ஏமாற்றியதாக ஆகிவிடும்’ என்று விளக்கம் சொன்னாராம் விஜயகாந்த்.''
''கூட்டணிக்குள் குழப்பம் என்று தகவல் பரவிக்கிடக்கிறதே?''
'' 'நாம எதைப் பண்ணினாலும் குறை சொல்லுவாங்க! மேடையில சிரித்தாலும், தப்பு சொல்வாங்க! சிரிக்கலேன்னாலும், குறை சொல்வாங்க! அந்தக் கூட்டத்துக்குப் போனால்தான், அதிகமாக் குறை சொல்வாங்க. அதனால், போக வேண்டாம்’ என்றாராம் விஜயகாந்த். இந்த நாட்டில் கூட்டணிக்கான இலக்கணங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன!'' என்ற கழுகார்...
''மின்சார வாரியம் மிகப் பெரிய நெருக்கடியில் இருக்கிறது. மின் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறதாம். 'ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரை பவர் கட் பண்ணித்தான் ஆகவேண்டும்’ என்றார்களாம். 'இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படி எதுவும் பண்ணிடாதீங்க’ என்று ஆட்சி மேலிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதாம்!'' என்றபடி எகிறி சிறகடித்தார் கழுகார்!
நன்றி ஜுனியர் விகடன்.. |
Comments
Quoting Js:
இதையும் பாருங்களேன்...
better hope for a new faces
vijayakanth stated he will be alone for all election but tis time he showed his cheapest political attitude
all your statistics state only one point people are not supporting any party they are forced to vote without any option
its time for individuals to act
new leaders are wanted now
1st கருத்து கணிப்பு : மொத்தம் 120000 and 2nd கருத்து கணிப்பு : மொத்தம் 100000 வாக்காளர்களைக்க ொண்டு பேசி 198 தொகுதிகள் கொடுத்த தகவல்
Total 198 234
AIADMK group 190 215
DMK group 08 18
BJP 0 01
தமிழ் மாணவர்கள் குழு
RSS feed for comments to this post