|
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு தம்மை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச தெரிவித்தார். எத்தகைய தீர்வாக இருப்பினும் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் ராஜபட்ச மேலும் கூறியது: அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவை அமல்படுத்துமாறு இந்தியா நிர்பந்திப்பதாகக் கூறுவது தவறு. அவ்விதம் எத்தகைய நெருக்குதலையும் இந்தியா அளிக்கவில்லை.
சமீபத்தில் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது வழக்கமான விஷயம்தான். அப்போது இரு நாடுகளிடையிலான இருதரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டனர். ஆனால் இது வழக்கமான சந்திப்பு என்று குறிப்பிட்டார் அதிபர் ராஜபட்ச.
இந்தியக் குழுவினர் தன்னைச் சந்தித்தபோது, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்துள்ள கருத்துகளை சுட்டிக் காட்டினர். இந்த பரிந்துரைகளை நிறைவேற்றினாலே இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான தீர்வாக அமையும் என்று சிவசங்கர் மேனன் குறிப்பிட்டதாக ராஜ பட்ச சுட்டிக் காட்டினார்.
எத்தகைய தீர்வாக இருப்பினும் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும், நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் எத்தகைய தீர்மானத்தையும் தான் நிறைவேற்றுவதாக ராஜபட்ச கூறினார். நாடாளுமன்ற தேர்வுக் குழுவை நியமித்திருப்பது, இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை தள்ளிப்போடும் உத்தி என்று கூறப்படுவதை அவர் முழுமையாக மறுத்தார். அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்வுக் குழுவும் பேச்சு நடத்தும். அரசியல் கட்சிகள் பேச்சு நடத்தி வருகிறது. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் மாகாண கவுன்சில் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கிழக்குப் பகுதியிலிருந்து பிரிந்து பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இத்தேர்தலுக்கு கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையும், சில ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதுகுறித்து கேட்டதற்கு, இதை சமாளிக்க இலங்கை அரசு இரண்டு வெவ்வேறு அறிக்கைகளை தயாரித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் ராணுவ செயல்பாடு 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு எவ்விதம் மாறியுள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக அமையும் என்றார் ராஜபட்ச. இந்த சந்திப்பின்போது உடனிருந்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் பேசுகையில், அனைத்து நாடுகளுமே இலங்கைக்கு எதிராக குற்றம் சாட்டவில்லை என்றும், ஐக்கிய நாடுகளின் சிறப்பு குழு தனது அறிக்கையில் போர் குற்றம் குறித்து குற்றம் சாட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
|
Comments
If INDIA honoured PRABA's words, it should not have played major role in TAMILs GENOCIDE. If INDIA did not intervene 4th EELAM WAR, like the previous 3 wars PRABA would have won it.
NDIA not only respect PRBA's words but also volunterily involved and led the war against TAMILS. So as a TAMILAN, our first enemy is INDIA
RSS feed for comments to this post